Saturday, June 15, 2013

கருணைக் கொலை...?


                                                  கருணைக் கொலை. ..?
                                                  ------------------------------



சென்றமாதம் நாங்கள் நாராயணீயம் பாராயணத்துக்காகக் குருவாயூர் சென்றிருந்தோம். மூன்று நாட்கள் ஊரிலிருக்கவில்லை.  நாங்கள் பெங்களூரில் இல்லாதிருந்தபோது  இரண்டு நாட்களுக்கு அடை மழை பெய்திருந்தது. பல வருடங்கள் காணாத முன் மாரி மழை என்றார்கள். எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள் (முன்புறம் ஒன்று பின் புறம் ஒன்று)  ஒரு மாமரம் இருக்கின்றன. அவை எல்லாமே பயன் தருபவை. தென்னை மரத்தில் தேங்காய்க் குலைகளும் மாமரத்தில் மாங்காய்களும் நல்ல ஈல்ட் கொடுப்பவை. அவற்றை பறிக்க ஆள் கிடைப்பதே குதிரைக் கொம்பு. ஒரு தென்னை மரத்தில் ஒரு முறை ஏற ரூ. 150/ கேட்பார்கள். அதுவும் தக்க சமயத்தில் கிடைக்க மாட்டார்கள். அப்படியே பறித்த காய்களைமட்டை எடுத்து வெட்டிக்கொடுக்கவும் ஆட்கள் கிடைப்பதில்லை. எங்களுக்காக இந்த மாதிரி வேலைகளை செய்து கொடுத்துக்கொண்டிருந்த பையன் கத்தார் போய் விட்டான். அதே போல் மாமரக் காய்களை பறிக்கவும் மிகவும் சிரமம்ம்
மரம் வெட்டல் நன்றி - கூகிள் இமேஜெஸ்

.
 நிலைமை இப்படி இருக்கையில், நாங்கள் ஊரிலில்லாத போது பெய்த மழையின் போது பின் புறத்தில் இருந்த தென்னை மரத்தின் மேல் இடி விழுந்ததாம். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறினார்கள். நாங்கள் வந்து பார்த்தபோது தென்னையின் உச்சியில் மட்டைகள் சரிந்து தொங்கிக் கொண்டிருந்தன. என்னேரமும் மட்டைகள் விழுந்து விடுவது போல் இருந்தது. நாங்கள் முதலில் சாய்ந்திருந்த மட்டைகளை வெட்டி இருக்கும் காய்களைப் பறிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் தகுந்த ஆட்கள் கிடைக்க வில்லை. வந்து பார்த்துப் போகிறவர்கள் எல்லாம் மரம் பட்டு விட்டது வெட்டி விட வேண்டும் என்றார்கள். நான் அவசரப் படவேண்டாம் , இன்னும் சிறிது காலம் பார்க்கலாம் மறுபடி துளிர்க்கிறதா என்று பார்த்து பிறகு முடிவு செய்யலாம் என்று சொன்னேன். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சாலையில் போவோருக்கும் மரம் ஒட்டி யிருக்கும் வீட்டாருக்கும் அதனால் ஆபத்து என்று சொல்லவே மரத்தை வெட்ட முடிவு செய்தோம். எனக்கோ, அந்த மரத்துக்கு உயிர் இருப்பது போலவும் பட்டுப்போய் சாகும் தருவாயிலிருப்பது போலவும் தோன்றியது. என்ன எண்ணி என்ன பயன்.? இன்றில்லாவிட்டால் நாளை வெட்ட வேண்டியதுதானே என்று சமாதானப் படுத்திக் கொண்டு அதை வெட்ட ஆட்கள் கிடைப் பார்களா என்று விசாரிக்கத் துவங்கினோம். மரம் வெட்ட ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. ஓரிருவர் வந்து பார்த்து அதை வெட்டி , மரத்தை எங்காவது கொண்டு போட ரூ.7000/ - கேட்டனர். எங்களுக்கு மயக்கம் வராத குறை. இந்த மாதிரி மரம் வெட்டிகளுக்கு என்று ஒரு சிண்டிகேட்  இருப்பதுபோல் தோன்றுகிறது. யாரிடம்சொல்லி விசாரித்தாலும் முன்பு வந்தவர்களையே காட்டுகின்றனர். அந்த மரத்திலிருந்து இதுவரை அந்த அளவு வரவு இருந்திருக்குமா என்பதே சந்தேகம். அக்கம் பக்கத்தோர் என்று பலரையும் கூட்டி பேரம் பேசினோம். ரூ.3000/- கொடுப்பதாகவும் வெட்டிய மட்டை மரம் முதலியன அங்கிருந்து அகற்றப் பட்டு எங்காவது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று முடிவாயிற்று. ஐந்து பேர் வந்தார்கள். டீசல் போட்டு இயக்கும் ஏதோ இயந்திரத்தில் ரம்பம் போல் எதையோ சேர்த்தார்கள். உச்சியில் இருந்து அறுத்துக் கொண்டு வந்தார்கள் எல்லா வேலையும் சுமார் மூன்று மணி நேரத்தில் செய்து விட்டார்கள். எனக்கு மட்டும் ஒரு வேளை அந்த மரத்துக்கு உயிர் இருந்திருந்தால் நாங்கள் செய்தது கொலை அல்லவா என்று தோன்றுகிறது. இருந்தாலும் அது கருணைக் கொலையே என்று சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.  .  

.    .    
 

15 comments:

  1. கிராமங்களில் கூட மரம் வெட்ட ஆள் கிடைப்பதில்லை! உணர்வுப் பூர்வமாக எழுதியுள்ளீர்கள்! நன்றி!

    ReplyDelete
  2. கருணைக் கொலை. ..?

    வேறொரு குட்டை ரக மரமாக அல்லது சப்போட்டா போன்ற உயரமில்லாத மரமாக வைக்கலாம்...!

    ReplyDelete
  3. உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன்.

    நகர வளர்ச்சியின் தீய விளைவுகளில் இது ஒன்று. இருக்கும் சிறு இடத்திலே மரங்கள் நட்டுவிட்டால் நாளாவட்டத்தில் இப்படி ஒரு சிக்கல். மரம் செடி எதுவும் இல்லாது போனால் வேறொரு சிக்கல்.

    எனினும், மரத்தை வெட்டி எடுத்துப் போக ஏழாயிரம் ரூபாயா! இந்தியா ரொம்ப முன்னேறிவிட்டது சார்.

    ReplyDelete
  4. மூவாயிரத்துக்கு முழு மரத்தையும் வெட்டினாங்களா?

    என் நண்பர் வீட்டில் மூன்று தென்னை மரங்களை வெட்ட வேண்டி வந்தது. மரத்தை ஆறடி உயரத்தில் அறுத்து நீக்கிவிட்டு, ஒரு குடை போல் கேன்வசில் வாங்கி அந்த ஸ்ட்ம்பளில் நிறுவினார்கள். கோடையில் மரக்குடை அவர்கள் பின்கட்டில் அழகாகவும் இதமாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  5. இப்பதிவில் வெளிபபட்டது தங்களின் மனமும் குணமும்தான் அய்யா. மரத்தையும், உயிருள்ள மனிதனாய் பாவிக்கும் பண்பு எத்தனை பேரிடம் உள்ளது. நன்றி அய்யா

    ReplyDelete

  6. @ s.suresh
    @ இராஜராஜேஸ்வரி
    @ அப்பாதுரை
    @ கரந்தை ஜெயக்குமார்.
    வீட்டின் முன் பகுதியில் ஒரு கொய்யா மரம் இருந்தது. காய் உள்ள மரம் கல்லடி படும். அதனாலும் அந்த மரம் இருந்த காரணத்தால் முன்னால் இருந்த தென்னை வளராததனாலும் அதை வெட்டினோம். தென்னை வளர்ந்து காய் கொடுக்கிறது. பின்னால் மாமரம் வளர ஆரம்பித்ததும் கருவேப்பிலை மரம் மாதுளைமரம் எல்லாம் பட்டுப் போய்விட்டது இருக்கும் சின்ன இடத்தில் இடப் பற்றாக்குறை. இப்போது பின்னால் இருந்த தென்னையும் போய் விட்டது.அப்பாதுரை நண்பர் செய்தது போல் செய்ய என் வீட்டு இடம் சரியில்லை. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  7. எங்கள் அம்பத்தூர் வீட்டில் இதையே நாங்களும் அனுபவித்தோம். ஆனால் தென்னை மரம் இல்லை. நல்ல பலன் கொடுத்துக் கொண்டிருந்த பாதிரி வகைப் பழங்கள் தரும் மாமரம். பக்கத்திலே அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டும் ஆட்களால் பலமுறை வெட்டுப்பட்டு வெட்டுப்பட்டுக் குற்றுயிரும், குலை உயிருமாக இருந்தது, அவங்க இங்கே போட்ட சிமெண்டினால் முழுதும் பட்டுப் போய் அதை வெட்டவும் ஆளே கிடைக்காமல், திண்டாடிப் பின்னர் ஐநூறோ /ஆயிரம் ரூபாயோ கொடுத்து வெட்டினோம். தூக்கிச் செல்லத் தனியாகக் கொடுக்கணுமாம். :(((( முன்பெல்லாம் மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு மரத்துச் சொந்தக்காரங்களுக்குப் பணம் கொடுத்தே பார்த்திருக்கேன். இப்போத் தான் புதுசா சில வருஷங்களாக இப்படி.

    இப்போவும் தென்னை மரம் ஏற ஆளில்லாமல் தேங்காய்கள் விழுந்து சிரிப்பாய்ச் சிரிக்கின்றன. :( உயிரைக் கொடுத்து வளர்த்தோம்.வாசலில் வேப்பமரம் என்ன கதினு தெரியலை.

    ReplyDelete
  8. எங்கள் வீட்டிலும் வேறொரு வகையில்
    தென்னை மரப்பிரச்சனை வந்தது
    நாங்களும் கருணக் கொலைதான் செய்தோம்
    நாங்கு ஆண்டுகாலம் அதன் பலனை
    அனுபவித்ததை எண்ண எண்ண வயிறு
    கலங்கத்தான் செய்கிறது
    நரகமாகும் நகரம்

    ReplyDelete
  9. தவிர்க்க முடியாமல் அகற்றியிருக்கிறீர்கள். ஆனாலும் வெட்டப்பட்டதில் வேதனை இருக்கும்.

    பத்து நிமிடம், அரைமணியில் முடிகிற சிறிய வேலைகளுக்கும் எலக்ட்ரீஷியன், கார்பென்டர் எல்லாம் சர்வ சாதாரணமாக ஐநூறு கேட்கிறார்கள் இப்போது.

    ReplyDelete
  10. இதுக்குத்தான் நான் வீட்டில் தென்னை மரமே வளர்க்கவில்லை.

    ReplyDelete
  11. GMB சர்,ன்னும் சியா வ்ர்டங்களுக்கு மன்பு இபடித்தான் நான் கிணற்று நீரைவாளியில் கையால் இறைத்து இறைத்து ஊற்றி வளர்த்த தென்னை மர்ணகளை வெட்டியது கண்ணில் நீர் வரவழைத்தது. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்ன செய்வது. ஊரோடு ஒத்து வாழ வேண்டியிருக்கிறதே!

    ReplyDelete
  12. நகர்ப்புறத்தில் காலி இடத்தில் மரம் வளர்ப்பது என்பது பக்கத்துவீட்டுக்காரரின் கருணையைப் பொறுத்தது. அதிலும் வீட்டை ஒட்டி மின்சார லைன் இருக்குமானால் மரம் வைக்கும் ஆசையே கூடாது. எல்லா இடத்திலும் மரம் வெட்ட இஷ்டத்திற்கு காசு கேட்கிறார்கள். நமது அவசரம், மரம் வெட்ட இயலாமையைப் பொறுத்து பேரம் பேசுவார்கள். நாமும் எப்படியோ பிரச்சினை முடிந்தால் சரி என்று கேட்ட காசை கொடுத்துவிடுவோம்.

    ReplyDelete

  13. @ கீதா சாம்பசிவம்
    @ ரமணி
    @ ராமலக்ஷ்மி
    @ டாக்டர் கந்தசாமி
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ தி, தமிழ் இளங்கோ
    இந்தப் பதிவே சில நடப்புகளைப் பகிர்ந்து கொள்ளவே எழுதினேன்.பலருக்கும் இம்மாதிரிஅனுபவங்கள் இருப்பது தெரிகிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  14. நம் கையால் நட்டு வளர்த்து நீரூற்றி அதன் பயனையும் அனுபவித்துவிட்டு ஒருநாள் நாமே வேறுவழியின்றி அதை வெட்டுவது மனத்திற்கு மிகவும் வேதனையான செயல். கருணைக்கொலை என்று பெயர்கொடுத்தது, கலங்கும் மனத்தை சமாதானப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.

    சிலவருடங்களுக்கு முன் சென்னையில் குடியிருந்தபோது கொல்லைப்புற வீட்டில் நன்கு காய்த்துக்கொண்டிருந்த தென்னை மரங்களை வேரோடு வெட்டி வீழ்த்தினார்கள். கேட்டபோது அந்த இடத்தில் சில போர்ஷன்கள் கட்டி வாடகைக்கு விடப்போவதாக சொன்னார்கள். அவர்களுக்கு வலித்ததோ இல்லையோ பச்சை மரங்கள் வீழ்வதைப் பார்த்த எனக்கு வலித்தது.

    ReplyDelete
  15. மதுரையில் எங்கள் சொந்தவீட்டில் உள்ள தென்னைமரம் மிக உயரமாய் இருக்கும். தேங்காய் பறித்து தருபவர்கள் மேலே ஏற மிக சிரமம் என்று அதிக காசு வாங்கியே ஏறுவார்கள். பக்கத்து வீடு ஒட்டு வீடு அங்கு இரண்டு மூன்று குடித்தனங்கள் இருக்கிறார்கள் மட்டை, தேங்காய் விழுவது அவர்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதாய் கூறிக் கொண்டு இருந்தார்கள் அதனால் அதை வெட்டி எடுத்து போக 5000 ரூபாய் கொடுத்தோம்.அம்மாவீட்டை வாங்கி அண்ணி மாடி கட்டும் போது பில்லர் போட இடைஞ்சலாக இருக்கு என்று இரண்டு மரங்களை வெட்டினார்கள் 7000 ஒரு மரத்துக்க்கு கொடுத்தார்கள். காய்க்கும் மரத்தை வெட்டியது மனதுக்கு வருத்தம்.
    தென்னம்கன்று வாங்கி கொடுத்து பரிகாரம் செய்ய சொன்னார்கள். யார் வைத்து பரமாரிப்பார்களோ அவர்களுக்கு அல்லவா கொடுக்க வேண்டும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete