Monday, October 29, 2012

எல்லாமே மாயைதான்.


                                    எல்லாமே மாயைதான்..
                                         ---------------------



பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ

செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம். 
--------------------------------------------------------------------------------------------.






11 comments:

  1. ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
    உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்.
    அருமையான வரிகள் அய்யா. அனுபவ வரிகள். நன்றி

    ReplyDelete
  2. மாயப் பிரபஞ்சத்தின் மாறாத தத்துவம் “எல்லாமே மாயைதான்” .
    அனுபவ மொழிகள்! அனைவரையும் சிந்திக்க வைக்கும்!

    ReplyDelete
  3. ஜி.எம்.பி சார்
    மாயை பற்றி ஓஷோ, அது பாம்பா கயிறா என்று குழம்ப வைக்கும் மாயை இல்லை என்கிறார். (சங்கரர் கூறுவது போல). ஒரு தரம் கிட்ட சென்று பார்த்து விட்டால் அது பாம்பா கயிறா என்ற மாயை விலகி விடுகிறது.
    மாயை என்பது தண்ணீரில்
    கிடையாக நிறுத்தி வைக்கப்படும் ஒரு கோலைப் போன்றது என்கிறார். என்ன தான் கோல் வளையவில்லை என்று நம் common sense சொன்னாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு கோல் வளைந்தே தெரிகிறது. அப்படிப்பட்டது தான் மாயை. மாயை என்று தெரிந்து கொண்டே
    எல்லாவற்றியும் செய்ய வேண்டி இருக்கிறது இவ்வுலகில். மாயை என்று நாம் சொல்லும் போது
    நம்மை அறியாமலேயே 'நிரந்தரம்' என்ற ஒன்றை பின்புலத்தில் கொண்டு வந்து விடுகிறோம்.

    இது மாயை என்றால் மாயை against what ? ஏதோ ஒன்று பின்புலத்தில் இருக்க வேண்டும். நிஜம்
    மட்டுமே கனவு காண முடியும். கனவு இன்னொரு கனவைக் காண முடியாது. எனவே மாயையின்
    பின்புலத்தில் உள்ள நிஜம் என்ன என்று அறியும் முயற்சியே ஞானத்தின் தேடல் என்று நினைக்கிறேன்.மாயையை வெறுக்க வேண்டியது இல்லை.வெறுமனே விழித்துக் கொண்டால் கனவு கலைந்து விடும்.கண்ணாடியை மறைக்கும் தூசை வெறுமனே துடைத்தால் போதும். கண்ணாடியையே உடைக்க வேண்டியது இல்லை அல்லவா?

    ReplyDelete
  4. மாயைக் குறித்த கவிதை
    மயங்கவைத்தும் போனது
    அதிகம் சிந்திக்க வைத்தும் போனது
    இக் கவிதைக்கு சமுத்ரா அவர்கள் கொடுத்துள்ள
    பின்னூட்டம் அழகுக்கு அழகு சேர்த்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மிகவும் அருமை நன்றி சகோ

    ReplyDelete

  6. @ கரந்தை ஜெயக் குமார்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ தி. தமிழ் இளங்கோ,
    @ சமுத்ரா,
    @ ரமணி,
    @ ரஜினி பிரதாப் சிங்,
    @ தேசியம் திவ்யமோஹன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சமுத்ராவின் விரிவான பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது. இல்லை என்று நமக்குத் தெரிந்தது இருப்பதுபொல் காட்சி தருவதே மாயை என்றுதான் நானும் எழுதி இருகிறேன். மனக் கண்ணாடியில் சேர்ந்துவரும் அழுக்கைத் துடைக்க அது அழுக்கு என்னும் உணர்வு வேண்டும் தெரியப் படுத்த எடுத்த முயற்சியே இப்பதிவு. இம்மாதிரி கருத்துப்பரிமாற்றம் உற்சாகமளிக்கிறது. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  7. உண்மையான வரிகள்...

    எ(இ)துவும் கடந்து போகும்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  8. நன்றி.எல்லாமே மாயைதான்

    ReplyDelete